தமிழ் இலக்கிய மன்றப் பெருவிழா
• கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைச் சார்பில் தமிழ் இலக்கிய மன்றப் பெருவிழா கே.எம்.ஜி. கலையரங்கில் 16.08.2018 அன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது. கல்லூரி மாணவியர் குத்து விளக்கினை ஒளிரச் செய்ய தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜா.ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினருக்கு சிறப்பு செய்து நினைவுப் பரிசு வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.ஜெயஸ்ரீராணி அவர்கள் தலைமையுரை நல்கிட, கல்லூரிச் செயலர் திரு.கே.எம்.ஜி. இராஜேந்திரன் அவர்களும், கல்லூரி இயக்குநர் முனைவர் த.கஜபதி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
• சிறப்பு விருந்தினர் அறிமுகத்தைப் பேரா.ரா.சே.பாலாஜி நிகழ்த்த, ‘செம்மொழி அறிவோம்” என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினரும் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் ப.சிவராஜி அவர்கள் செம்மொழி இலக்கியங்களில் தொல்காப்பியம், பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் களவியலுரை, முத்தொள்ளாயிரம் முதலான 41 இலக்கியங்களே தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க காரணம் எனவும் கிடைக்கப்பெறும் இந்த இலக்கியங்களையாவது தமிழர்கள் முற்றும் ஓதியுணர்ந்து செம்மொழித் தமிழின் பெருமையை நிலைக்கச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார். நிறைவாக பேரா.வே.சரளா நன்றி கூறினார்.